புதன், 28 ஜூலை, 2010

யாரறிவார் இவள் மனதை?





வரம் ஒன்று தந்தான்


இறைவன் இலவசமாக

அழுகையும் கண்ணீரையும்



கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய

காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே

கனவாகியது எனக்கு....



வேதனை என்ற சொல்லுக்கு

வரை விலக்கணம் தனைக் கூறியது

கன்னங்களின் ஓரம்

காய்ந்துபோன கண்ணீர்த்துளி..



எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்

பொன்னகையில் பார்ப்பதை விட

புன்னகையில் பார்ப்பது என்னை

பகல் நேர பௌர்ணமிகளாய்

தோன்றியது சிலருக்கு ....



எனை நோக்கி அனுதாபம்

அடைந்த சில நட்புகளை

மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்

காயம் கண்ட இதயமதை மீண்டும்

காயப்படுத்திய உறவுகளை இன்னும்

ஏற்கவில்லை என் மனம் ஏனோ?



காலங்களும் கரைந்து சென்றது

காட்சிகளும் மாறியது

கனவுகள் போல

கண்கள் கண்ட கனவுகளும்

கலைந்து சென்றது

கார்மேகம் போல...



மனதில் எழுந்த கேள்விகளுக்கு

விடை தேடுகின்றேன்

நான் நாளும்..



மனித மனங்களும் மரித்து விட்டது

இறைவனோ மௌனம் காக்கின்றான்

கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....



பேதை இவள் பேதலிக்கின்றாள்

வரும் கால வாழ்வை எண்ணி

யாரறிவார் இவள் மனதை......